வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவதன் மூலம் 13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வாகாது என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்துவோம் என, த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இந்த முடிவு கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் 5 கட்சிகளினாலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது.
எனவே இந்த முடிவில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.மேலும் 13ம் திருத்தம் தொடர்பில் முழுமையாக அறிந்துள்ள, சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சீ.வீ.விக்னேஸ்வரன் மாகாணசபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவதன் மூலம் ஆளுநர் பிடியிலிருக்கும் மாகாணசபைக்கான அதிகாரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார்.
ஆனால் அதற்கு இன்றுள்ள அரசாங்கம், ஆளுநர் முழமையாக ஒத்துழைப்பார்களா? என்றால் இல்லை என்பதே பதில். இந்நிலையில் எமக்கு உரித்தான அதிகாரங்கள் மறுக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், மிகப் பெரியளவில் சர்வதேசத்திடமும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இதனடிப்படையில் 13ம் திருத்தம் தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாஷைகளைக் கூட நிறைவு செய்திராத நிலையில், அது இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது தானாக வெளிப்படுத்தப்படும். அதுவே ஈழத் தமிழர் வரலாற்றில் மிகப்பெரும் புரட்சியாகவும் அமையும்.
இந்தப் புரட்சி அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், அதற்கு அடுத்துவரும் ஐ.நா.மனிதவுரிமைகள் கூட்டத் தொடரிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்பது எதிர்வுகூற முடியாதளவு பாராதூரமானதாக இருக்கும். இதனைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள், இழுபறிகள் நிலவுவதாக இட்டுக்கட்டப்பட்ட கதைகள் வெளிவிடப்பட்டிருக்கின்றன. ஆனால் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காகவே மூன்று தினங்கள் கூடி ஆராயப்பட்டது.
கூட்டமைப்பு 5 கட்சிகளின் கூட்டமைப்பு எனவே ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கருத்துக்கள், நிலைப்பாடுகள் இருக்கின்றன. எனவே அவர்களது கருத்துக்களையும் தலைமை கருத்தில் எடுக்கவேண்டும்.
எனவே கால அவகாசம் தேவை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் மூன்று தினங்களில் கூட்டமைப்பு ஏக மனதாக சரியான முடிவு எடுத்திருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் பயணிக்காது என்றார்.
0 kommentarer