<
மத்தியகிழக்கின் காசா நிலப்பரப்பில் வாழும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை எகிப்திய தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள். காசா பகுதிக்கு அவசர விஜயம் மேற்கொண்ட எகிப்திய பிரதமர் ஹிஷாம் கண்டில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் பேரவலமாக மாறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இஸ்ரேலிய தாக்குதல்கள் மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்று வர்ணித்திருக்கும் அதிபர் முகமது முர்ஸி காசா பகுதியிலிருந்து எகிப்து தானாக வெளியேறாது என்றும் தெரிவித்திருக்கிறார். இரண்டாவது நாளாக டெல் அவிவ் நோக்கிய பாலத்தீனர்களின் ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஜெருசலேத்திலும் முதல்முறையாக சைரன் ஒலிகளை கேட்கக்கூடியதாக இருந்தது. அந்த நகரத்தின் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத பிரிவு தெரிவித்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்றன. எகிப்திய தலைநகர் கெய்ரோவில் இருக்கும் அல் அஸார் மசூதிக்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதவரான கோஷங்களை எழுப்பினார்கள். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருக்கும் ஐநா அலுவலக வளாகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் கூடி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் தெற்கத்திய நகரான சிடானில் இருக்கும் பாலத்தீன அகதி முகாம்களுக்கு வெளியிலும் ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் குழுமினார்கள். மேற்குக்கரை நகரான ரமல்லாவின் தெருக்களில் குழுமிய ஆர்பாட்டக்காரர்களில் சிலர் ஹமாஸின் பச்சைக்கொடியை ஏந்தியிருந்தனர்.
0 kommentarer