காதலியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட காதலன் விளக்கமறியலில்!- கோமா நிலைக்குள்ளான கர்ப்பிணித் தாய் மரணம்
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பிரதேச மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச் சென்றதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார்.
மக்கள் தமது காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துச் சென்றதாகவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தலைவி தெரிவித்தார்.
தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்ட போது அவர்களை விடுவிப்பதற்காக தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.
2008 முதல் 2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு காணமல் போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில் அங்கம் வகிப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவி பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தம்பலகாமம் பகுதியில் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி இலங்கை படைத்தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
பலாத்காரமாக யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பித்து அதன் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை இராணுவ தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை மையமாக வைத்து யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் படைத்தரப்பால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் அது கூறுகிறது.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு நிலை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு படைத்தரப்பால் அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் அந்த இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்பிலுள்ள மாணவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் பலம் பொருந்திய நபர் ஒருவரே பின்னணியில் உள்ளார்.
எனவே தற்போது எழுந்துள்ள இந்த நிலைக்கும் யார் பொறுப்புதாரி என்பது எவருக்கும் தெரியாத ஒரு விடயமல்லவென்றும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தின் நொச்சிகுளம் வீதியில் வெள்ளத்தில் மிதந்து வந்த கண்ணிவெடிகள் இரண்டு மற்றும் கைக்குண்டுகள் இரண்டும் படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், வவுனியாவில் குளங்கள் நிரம்பி, பெருந்தெருக்களில் கரைபுரண்டு ஒடுவதால் மண் படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போகின்றன.
இந்நிலையில், நொச்சிக்குளம் வீதியில் உள்ள மண்படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போனதையடுத்து, புதையுண்டு கிடந்த வெடிப்பொருட்கள் வெளியில் தெரிந்துள்ளன.
இப்பகுதி மக்கள் இதுகுறித்து படையினருக்கு அறிவித்துள்ளனர். படையினர் அந்த வெடிப்பொருட்களை மீட்டு, செயலிழக்க செய்துள்ளனர்.
இவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் 15 கிலோகிராம் என்று படையினர் தெரிவித்துள்ளனர். இவை விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில், 35 குளக்கட்டுகள் உடைப்புக்குள்ளாகியுள்ளன. இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மாத்தளையில் ரத்தோட்டைப் பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ரத்தோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்தோட்டை நிக்கலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் கடந்த ழூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றயதினம் ரத்தோட்டை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் இருந்து சண்முகம் சதாசிவம் என்பவரின் சடலம் மிட்கப்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.