“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்”என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களைத்திரட்டி போராடுவோம் என சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்திற்கு கிடைத்த சிங்கள அரசின் பதிலாகவே இதனைப்பார்க்க முடியும். என்றாலும் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க மஹிந்த ஒரு நாடகத்தினை மேடை ஏற்றியே ஆகவேண்டும்.
.
அதில் ஒன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு என சிறிலங்கா அரசினால் தெரிவிக்கப்பட்ட ‘பாராளுமன்றத் தெரிவுக் குழு’ ஆகும் இந்த விடயத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசு பட்டபாடு பெரும் பாடாகிப் போனது. கடைசியில் காரியம் கைகூடாத நிலையில் குறிப்பிட்ட விடயத்தைப் சபையில் சமாப்பிக்க முடியாது போய் விட்டது. எப்போது மீண்டும் சமர்ப்பிப்பது என்று திகதி கூறாமலேயே சிறிலங்கா அரசு விடயத்தைச் சமாளித்து விட்டது.
.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற சிறிலங்கா அரசின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இது ஒரு பாரிய ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.
.
இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பது தொடர்பில் ஆளுந்தரப்பிலிருந்து எழுந்த பாரிய எதிர்ப்பலையே இது ஒத்தி வைக்கப்பட்டமைக்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. சிரேஷ்ட அமைச்சரான திஸ்ஸ விதாரண கூட அரசின் இந்தத் தீர்மானம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
.
தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கூடிய சர்வகட்சிக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் என்ற வகையில் அவர் தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினாலும் எதுவுமே ஆகப் போவதில்லை என்ற அவரின் நம்பிக்கையின் வெளிப்பாடே அந்தக் கருத்தாகும்.
.
அண்மையில் சிறிலங்கா அரசு தலைவரின் அலரி மாளிகையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின போது கூட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமது ஆதரவை முழுமையாகத் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான சிரேஷ்ட அமைச்சர்கள் இந்த விடயத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அவை தோல்வியடைந்தமை தொடர்பிலும் அவர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான ஆணைக் குழுக்களையும் தெரிவுக் குழுக்களையும் நியமித்துக் காலத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை என்றும் அவ்வாறு செயற்பட்டால் சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு தமிழர்களுக்கு அதிகபட்சத் தீர்வினை வழங்கும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படும் எனவும் அவர்கள் அங்கு கருத்துத் தெரிவித்தனர் எனவும் தகவல் கசிந்துள்ளன.
.
13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தி இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீhத்து வைப்பதே சிறந்தது என்ற கருத்து அங்கு மேலோங்கிக் காணப்பட்டதாகத் தெரிய வருகிறது.
.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கருத்துகளை ஒட்டு மொத்தத்தில் பார்க்கப் போனால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உண்மையான விருப்பம் இல்லாத நிலையில் சர்வதேசத்துக்குப் பயந்தும் ஒன்றுபட்ட தேசத்துக்கு ஆபத்து வருமோ என்ற என்ற அச்சம் காரணமாகவுமே அவர்கள் இப்படித் தெரிவித்துள்ளார்கள் என்றும் கொள்ள முடியும்.
.
ஆனால்ää இந்த விடயத்தில் ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க அங்கு வீறாப்புடன் நடந்து கொண்டதாகவும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் தேவை இல்லையெனக் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
.
அமைச்சர் சம்பிக்கவைப் பொறுத்த வரையில் அவர் பௌத்த இனவாதி மட்டுமல்ல.. தமிழனத்தின் சிங்களத் துரோகியுமாவார் சிறிலங்கா அரசை ஒரு சர்வதேச சண்டியனாகக் காட்டிக் கொள்ளவே அவர் என்றும் முயற்சிப்பவர். இவரின் அண்மைக்கால இனவாதக் கருத்துகள் விமல் வீரவன்சவை தண்ணி கேட்கும் அளவுக்கு முந்தி நிற்கின்றன.
.
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் தமிழ் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்புப் பிரசாரங்களை ஆரம்பிப்போம். அரசும் தோற்கடிக்கப்படும்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க வழங்கிய பதில் அவரது தமிழின விரோதப் போக்கை அப்படியே காட்டியுள்ளது.
.
“பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
.
பிரபாகரனின் ஆயுதங்கள் சிங்களவர்களை ஒருபோதும் மண்டியிடச் செய்யவும் இல்லை. அதே போன்று தமிழினத்திடம் சிங்கள இனம் மண்டியிட வேண்டிய அவசியமும் இல்லை. என்ற உண்மை அப்படியே இருக்க அமைச்சர் சம்பிக்க இவ்வாறு தெரிவித்திருப்பதானது தென்னிலங்கைச் சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி மீண்டும் அவர்களை தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காகவே என்றுதான் கூற வேண்டும்.
.
இவ்வாறான இனவாத முகமுடைய பல கட்சிகளை உள்ளடக்கியவர்களைக் கொண்ட இன்றைய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிச்சயமாகத் தீர்வினை வழங்கமாட்டாது என்பது இதன் மூலம் தெளிவடைகிறது. அதேவேளை சிறிலங்கா அரசுக்கும் தான் தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறானதொரு நிலையே தேவை என்பதும் யதார்த்தமானது.
.
இவைகள் ஒரு புறமிருக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவைத் தாம் நிராகரிப்பதாகவும் அதில் பங்கு கொள்ளப் போவதில்லையென்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.வி. போன்றன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இதுவே.
.
அரசில் அங்கம் வகிக்கும் இன்னொரு சிறுபான்மை இனக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தனது நிலைப்பாட்டினை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அக்கட்சி இடம்பெறமாட்டாது என அறிய வருகிறது.
.
ஆக மொத்தத்தில், பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டால் இடம்பெறப்போகும் கட்சிகள் ஆளுந்தரப்பைச் சேர்ந்த கட்சிகள் மட்டும்தான் என்ற நிலையே இன்று உள்ளது. சம்பிக்கவின் ஹெல உறுமய, விமலின் தேசிய சுதந்திர முன்னணி, டக்ளஸின் ஈ.பி.டி.பி, றிசாத்தின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகளின் பங்களிப்புடன் பாராளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டால் நல்லதொரு தெருக் கூத்தாடிகளின் நாடகத்தை நம்மால் பார்க்க முடியும். தவிரவும் பிரபாகரனால் செய்ய முடியாததை இனிமேல் யாராலும் செய்ய முடியாது என்ற மமதையில் உள்ள சிங்களத்திடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது மாறாக அனைத்துலகம் அல்லது மூன்றாவது சக்தி ஒன்றின் தலையீடே பிரச்சினையை தீர்க்க ஏதுவாக அமையும்.
.
ஈழ நாதத்துக்காக கொழும்பிலிருந்து சித்தன்….
0 kommentarer