கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டடுள்ளது.
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இராசையா துரைரட்ணம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மாகாண சபை கலைக்கப்படக்கூடாது எனத் தெரிவித்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்ததாகவும் அதன்படி மாகாண சபையைக் கலைக்கமுடியாது என துரைரட்ணம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சிசிர டி.ஆப்ரூ. அனில் குணரத்ன மற்றும் ஏ.டபிள்யூ.ஏ சலாம் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட குழுவினால் குறித்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மாகாண சபையைக் கலைப்பதற்கு, மாகாண ஆளுநருக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கம் இருந்தமை தெரியவருவதாக நீதிபதிகள் குழு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அந்த மாகாண சபையைக் கலைப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
0 kommentarer