பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள்வீதியில் வைத்து படை புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார் என்ற இளைஞர் நீண்டகாலத்தின் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில் தாயாருடன் கடந்த இரவு நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் சென்றிருக்கின்றார்.
அவர் சென்ற போது படைப் புலனாய்வாளர்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றனர். ஆலயத்தின் உள்வீதியில் சென்ற போது அவரது கையில் புலிச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்ததை அவதானித்ததும் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியதுடன் யாழ்.காவல்துறையினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
குறித்த இளைஞர் யாழ்.காவல்துறை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
அவர் தற்காப்புக் கலையில் கை தேர்ந்தவர் என்றும் அதில் பங்கேற்பதற்காகவே பச்சைகுத்திக் கொண்டிருந்ததாகவும் தாயார் தெரிவித்திருக்கின்றார்.
இரண்டாம் இணைப்பு:
பிரான்ஸிலிருந்து யாழ் வந்திருந்த புலம்பெயர் இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.
அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார்.
இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர கூறுகையில்,
பிரான்ஸை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞன் தனது கையில் புலிச் சின்னத்தை பச்சை குத்தியிருந்ததால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது தாயார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
கைதான இளைஞனிடம் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். விசாரணைகளின் முடிவில் அவ்விளைஞனுக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரியவந்தது.
பச்சை குத்துமிடத்தில் குறித்த சின்னம் தன்னை கவர்ந்ததால் தான் அதனை பச்சை குத்திக் கொண்டதாக அவ்விளைஞன் விசாரணைகளின்போது எம்மிடம் தெரிவித்தார்.இதனையடுத்து, நீதவான் எந்தவித தண்டனையுமின்றி அவ்விளைஞனை விடுதலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
0 kommentarer