ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாது மறுத்து வருகின்றது.
ஆனால் லண்டனில் உள்ள சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி திரைப்படமாக வெளளியிட்டுள்ளது. அதனை நாம் பாராளுமன்றத்தில் பார்வையிட்டோம். அதைப் பார்த்து முடிந்ததும் நாமெல்லோரும் மௌனித்து விட்டோம்.
இனிமேலும் ஸ்ரீலங்கா அரசின் கூற்றினை நாம் நம்பப் போவதில்லை. யுத்தத்தின் போது இடம்பெற்ற கொலைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டுமென கனடா அரசு வற்புறுத்தி வருகின்றது.
அதுமாத்திரமல்ல பொதுநலவாய நாடுகளின் அடுத்த மாநாட்டினை ஸ்ரீலங்காவில் நடாத்த அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றது.
மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழினத்துக்கு ஏற்பட்ட பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவை ஒட்டி நாடு கடந்த தமிழீழ அரசினரும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து ரொறண்டோ குவீன்ஸ் பார்க் சட்ட சபை முன்றலில் வெள்ளிக்கிழமை மாலை நடாத்திய தமிழீழத் தேசீய துக்க நாள் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய என்.டி.பி. எம்.பி. பேராசிரியர் கிரெய்க் ஸ்கொட் (Craig Scott) இவ்வாறு கூறினார்.
காலஞ் சென்ற என்.டி.பி.தலைவர் ஜக் லேட்டனின் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய இவர் “நான் ஜக் லேட்டனைப் பின்பற்றி தமிழினத்தவர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்கப் போராடுவேன். எமது கட்சி கடந்த மூன்று ஆண்டு கால மாக தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கான ஆதாரங்களை திரட்டி வருகின்றது” என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமர் டாக்டர் ராம் சிவலிங்கம், கனடா தமிழர் இணையத் தலைவரும், அன்றைய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவருமான வின் மகாலிங்கம், கனடிய மருத்துவர் சங்கத் தலைவி டாக்டர் ராஜேஸ் லோகன், சர்வதேச மன்னிப்புச் சபையிலிருந்து ஜோன் ஆர்கியூ, நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையாளர் திருமதி செல்வம் சிறிதாஸ் ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றி நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தனர்.
அடுத்து சிறுமிகள் கனடா தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் பாடினார்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தில் உயிரிழந்தோரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்த பீடத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பேரழிவினை சித்தரிக்கும் படங்களை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் மலராஞ்சலி செலுத்தினார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சியான் சின்னராசாவும், செல்வி சசி காசிநாதனும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடா பிரிவின் பிரதிநிதியான ஜோன் ஆர்கியூ ( John Argue) உரையாற்றிய போது,
“கனடாவில் மாத்திரமல்ல சர்வதேச நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாம் கௌரவத்துடனும், தன்மானத்துடனும் வாழ வழி வகுக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா அரசு மனித உரிமைக்கு மதிப்பளிக்காது பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்றழித்தது. கொன்றழிக்கப்படாதிருந்தால் இன்று இக்கூட்டத்தில் மேலும் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீலங்கா அரசு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழனத்துக்கு சாதகமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களாகிய உங்களுக்கு உரிமை வழங்கப்படும் வரை நாம் உங்களுடன் இணைந்து போராடுவோம்” என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் உரையாற்றிய போது, “மே மாதம் 18ம் திகதி எம்மவரது உள்ளங்களை உறைய வைத்த தினம். சிங்கள அரசு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரங்கேற்றிய நிகழ்வு.
மக்களை ஓட ஓட விரட்டி கொன்றழித்து, பாடசாலை வைத்தியசாலைகள் எங்கும் குண்டுகளை வீசி கொன்றழித்த நாள். அதனை இன்று வெற்றி விழாவாகக் கொண்டாடுகின்றது. தமிழர்களாகிய நாம் அழியமாட்டோம். சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போன்று உயிர்த்து எழுவோம்.
இன்றைய தினத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலி சேவை யை ஆரம்பித்துள்ளோம். பிரான்ஸில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியை பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளிலும் கேட்க முடியும்.
காலப் போக்கில் ஏனைய நாடுகளிலும் கேட்கும் படியாக இருக்கும். தமிழ் ஆங்கில மொழிகளிலும் பின்னர் சிங்கள மொழியிலும் சேவை நடாத்தப்படும்” எனக் கூறினார்.
லிபரல் கட்சி எம்.பி. ஜிம் காரியியானிஸ், தமிழினம் தமது உரிமைகளை வென்றெடுக்க லிபரல் கட்சி ஆதரவளிக்கும் எனக் கூறிய கட்சித் தலைவர் பொப் றேயின் செய்தியினை வாசித்து நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியிடம் கையளித்தார்.
முன்னாள் ஸ்ரீலங்கா எம்.பி.யும், நா.க.த.அ.ன் பிரதிநிதியுமான ஈழவேந்தன் உரையாற்றிய போது,
“ஒரு நாட்டிலே இனப் படுகொலை மேற்கொள்ளப்படும் போது அதிலே தலையிடுவதற்கு மூன்றாவது நாடுகளுக்கு உரிமையுண்டு என “ஜெனசைட்” என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டி உணர்ச்சி வசமாகப் பேசினார்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்றது மனித உரிமைக்கு மாறான யுத்தமல்ல. அங்கு நடைபெற்றது இனப் படுகொலை தான் என வலியுறுத்திப் பேசினார்.
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி றாதிகா சிற்சபைஈசன் உரையாற்றிய போது,
“ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டுமாயின் நாம் இங்கிருந்து குரல் கொடுக்க வேண்டும். துக்க தினமான மே 18ம் திகதி பற்றிய அறிக்கை ஒன்றினை நான் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வாசித்தேன்.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அதனால் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா அரசு தமிழினத்துக்கு எதிரான மேற்கொண்டு வரும் அநீதியான செயல்கள் குறித்து கனடா அரசும் பிற நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் ராதிகா வேண்டுகோள் விடுத்தார்.
கனடியத் தமிழர் பேரவை சார்பாக அதன் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையம் சார்பாக திரு நாதன்வீரவாகு, படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோர் உட்பட மற்றும் பலரும் உரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் அனைவரும் சுடர் ஏந்தி அஞ்சலி செய்ததோடு தமிழின விடிவை வேண்டி உறுதியுரை ஒன்றையும் அனைவரும் உரத்துக் கூறி முள்ளிவாய்க்கால்ச் சூழலில் உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
0 kommentarer