இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2 லட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று சிறிலங்காப் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார். தி.மு.கவின் இந்த நடவடிக்கையை வாழும் கலை அமைப்பின் தலைவர் சிறீ ரவிசங்கரும் வரவேற்றிருந்தார். அத்துடன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் அத்தகைய தேவை எதுவும் இல்லை என மறுத்துள்ள அமைச்சர் முரளிதரன், இலங்கையில் நிலைமைகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு இதுதான் சரியான தருணம் எனவும் குறிப்பிட்டார். "எமது நாட்டில் நிலைமைகள் நல்ல முறையில் இருக்கின்றன. மக்களை நாம் வரவேற்பதற்கான சிறந்த நேரம் இது என நான் நினைக்கிறேன்" என்றார் முரளிதரன்.
தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தேவையில்லை - விநாயகமூர்த்தி முரளிதரன்
Lagt inn av
chandran
05.10.09
0 kommentarer