வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்பு போர் நிறைவடைந்ததன் பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்யுமாறு ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சை வலியுறுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்யப்பட வேண்டுமென கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் கொள்வனவு தொடர்பில் சரத் பொன்சேகா கையொப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தை அவர் ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை காட்டிக் கொடுக்கும் ஓர் துரோகியின் நிலையிலேயே நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், போர் நிறைவடைந்ததன் பின்னர் கோதபாய ராஜபக்ஷ ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ள விடுத்த கோரிக்கையை தாம் மறுத்ததாக சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே இராணுவத் தளபதி பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
0 kommentarer