வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த யாழ். தீவுப்பகுதிகளை சொந்த இடமாகக் கொண்ட சுமார் 3000 மக்கள் வவுனியாவில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், அவர்கள் தீவுப்பகுதிகளில் குடியமர்த்தப்படாமல், இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே கணேஸ், படையினரின் அனுமதி கிடைத்தவுடன் குறித்த இடம்பெயர் மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என தெரிவித்துள்ளார்.
தீவுப்பகுதிகளை சேர்ந்த 6000 பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 3000 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 3000 பேர் விரைவில் அழைத்து வரப்படுவர் என கணேஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் 672 இடம்பெயர்ந்தோர் நேற்று வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
இதேவேளை வவுனியா முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு கைதடி மற்றும் மிருசுவில் ஆகிய முகாம்களில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த 53 பேர் நேற்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் படைத்தரப்பால் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
வவுனியா முகாம்களில் இருந்து திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்ட 389 குடும்பங்களில் 374 குடும்பங்களை சேர்ந்தவர்கள், மீள்குடியமர்த்தப்படாமல், படையினரின் பாதுகாப்பில் இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது. 15 குடும்பங்கள் மாத்திரமே அவர்களின் கிராமங்களுக்கு சென்று வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், படையினரின் பாதுகாப்பில்,உள்ளவர்கள் விசாரணைகளின் பின்னரே விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 101 குடும்பங்களை சேர்ந்த 350 பேர் தம்பலகாமம் ஆதிக்கோணேஸ்வரர் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 87 குடும்பங்களை சேர்ந்த 268 பேர் ஸ்ரீசெண்பகா வித்தியாலயத்திலும்,83 குடும்பங்களை சேர்ந்த 272 பேர் குச்சவெளி விவேகாநந்த மகா வித்தியாலயத்திலும் 103 குடும்பங்களை சேர்ந்த 329 பேர் அலஸ்காடன் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
வவு. முகாம்களில் இருந்து அழைத்து சென்ற தீவுப்பகுதி மற்றும் திருகோணமலை மக்கள் மீண்டும் மாற்று முகாம்களில் தடுத்து வைப்பு
Lagt inn av
chandran
29.09.09
0 kommentarer