அந்தமான் அருகே ராக்கெட் குண்டுகளுடன் மர்ம படகு சிக்கியது: தீவிரவாதிகள் வந்தார்களா?
அந்தமான் நிகோபரில் உள்ள தீவு கூட்டங்களில் தெரசா தீவு என்றொரு குட்டி தீவு உள்ளது.இந்த தீவு அருகே கடந்த11-ந்தேதி நடுத்தர பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பைபர் படகின் நகர்வை கண் காணித்தப்படி இருந்தனர்.
இந்த நிலையில் தெரசா தீவு மக்கள் சிலர் மர்ம படகு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரும், ராணுவத்தினரும் அந்த படகை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அந்த படகில் ராக்கெட் குண்டுகள் 2 இருந்தன. ஆனால் அந்த குண்டுகளை பயன்படுத்த தேவையான ராக்கெட் லாஞ்சர்கள் எதுவும் இல்லை. இது தவிர ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் 12 இருந்தன.
இந்த மர்ம படகு மலக்கா ஜலசந்தி பகுதியில் முதலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. பிறகே அது தெரசா தீவு பக்கம் வந்துள்ளது. மலக்கா ஜலசந்தி பகுதி சர்வதேச கடத்தல்காரர்கள் அடிக்கடி ஊடுருவிச் செல்லும் கடல் பாதையாகும்.
எனவே இந்த மர்ம படகில் கடத்தல்காரர்கள் பயங்கர ஆயுதங்களை கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட படகு வெளிநாட்டில் தயாரானது. எனவே ஏதோ ஒரு நாட்டுக்கு ஆயுதம் கடத்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
அந்த படகில் நிறைய உணவுப்பொருட்கள் இருந்தற்கான அடையாளம் உள்ளது. எனவே சமீபத்தில் இந்தியா பிடித்த வட கொரியா கப்பலுக்கும், இந்த மர்ம படகுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே பயங்கர ஆயுதங்களுடன் இந்த படகு மூலம் தீவிரவாதிகள் ஊடு ருவி இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆனால் ராணுவத்தினர் இது பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். மர்ம படகு குறித்து மத்திய உள்துறைக்கு அவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
அந்தமான் அருகே ராக்கெட் குண்டுகளுடன் மர்ம படகு சிக்கியது: தீவிரவாதிகள் வந்தார்களா?
Lagt inn av
chandran
24.09.09
0 kommentarer