
யாழிலிருந்து கொழும்பு நோக்கின் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேரூந்து ஒன்று இயக்கச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில், பேரூந்தில் பயணித்த நான்கு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “வாயுபுத்திரன்" என அழைக்கப்படும், யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான சொகுசு பேரூந்து சேவையின் பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பேரூந்து கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்ததாகவும், இயக்கச்சி வளைவில் எதிரில் வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முற்பட்டபோது, பேரூந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பேரூந்து இரண்டு தடவைகள் தலைகீழாக புரண்டெழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தச் சம்பவத்தில் பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விடயமறிந்து காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 kommentarer