இலங்கை இராணுவத்தின் இனவாத கோரத்தாண்டவத்தில் தப்பி, குற்றுயிராய் முகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை. குடிப்பதற்குக்கூட நீரின்றித் தவிக்கின்றனர். கழிப்பிடம் செல்ல மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். மழை வெள்ளம் புகுந்து கூடாரங்களை அடித்துச் செல்கிறது.....
பெண்களைப் படையாட்கள் பாலியல் வன்முறை செய்கிறார்கள். விறகுக்கு வெளியே சென்றால்கூட சுட்டுவீழ்த்தப்படுகிறார்கள் என்ற செய்தியை தாமாக பார்த்து உணர்ந்து தெரிவிப்பதற்காக இந்திய தூதுக்குழு இலங்கை சென்றுள்ளதா?
கடந்த ஒரு மாத காலமாகவே இந்திய காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டின் இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கில் சில மாற்றங்கள் தென்படத்தான் செய்கின்றது. கலைஞரின் கடித வரிகளும், காங்கிரஸ்குழு டெல்லி செல்வதும் சிதம்பரம் கலைஞரை சந்திப்பதும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் இந்திய விஜயமும் திட்டமி்ட்ட ஒரு செயற்பாட்டின் படிப்படியான நகர்வுகளாகவே தென்படுகிறது.
பழிவாங்கலுடன் கூடிய தமிழ் மக்கள் விரோதப் போக்கினை கொண்ட காங்கிரசும் தேர்தலுக்காக ஈழத்தமிழர் பல்லவி பாடும் தி.மு.க வும் தேர்தல்கள் எதுவுமில்லாத நேரத்தில் இவ்வாறான ஒரு செயற்பாட்டினை மேற்கொள்வதானது புரிந்து கொள்தலுக்கு கடினமான ஒன்றே.
இருப்பினும் ஈழத்தமிழருக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நினைப்பது நம்மை நாமே முட்டாள்களாக்கும் ஒன்றே.
தத்தமது நலன்களினை மட்டும் கருத்திற்கொண்டு ஈழத்தமிழர் விடயத்தினை கையில் எடுக்கும் இரண்டு கட்சியினதும் உண்மையான நோக்கத்தினை தெரிந்து கொள்வோமாயின் இக்குழுவின் விஜயம் தொடர்பான மேலும் சில விடயங்களை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கையில் மகிந்தவைப் போன்றே தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளினதும் எதிரிக்கட்சிகளினதும் தவறான அல்லது சரிவர எடுக்கப்படாத பிரசார யுக்திகளால் தி.மு.க வின் செல்வாக்கு அதிகரித்து செல்கின்ற போதும் காங்கிரஸ் கூட்டுடன் கூடிய ஈழத்தமிழர் விரோதப் போக்கானது எத்தகைய விளைவினை ஏற்படுத்துமோ என்ற பயம் தி.மு.க விற்கு இருக்கத்தான் செய்கின்றது.
இதைச்சரிக்கட்டும் நோக்கில் எதையாவது செய்யவேண்டும் என்கின்ற எண்ணம் தி.மு.க விற்கு இருக்கின்ற போதும் என்ன செய்ய முடியும் என்கின்ற கையாலாகாத் தன்மையும் இருக்கவே செய்கின்றது. தாமாக ஒரு விஜயத்தினை ஏற்பாடு செய்ய முடியாத போதும் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்டதன் மூலம் தி.மு.க ஆதாயம் பெற முற்பட்டுள்ளது.
காங்கிரசினை பொறுத்தவரை தமிழகத்தில் தன் செல்வாக்கினை அதிகரிப்பதற்காக அண்மைக்காலங்களில் எடுத்த சில நடவடிக்கைகளின் மூலம் தமிழக தமிழ் மக்களின் உண்மையான நாடித்துடிப்பினை அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர் சார்பான நடவடிக்கையொன்றின் மூலம் இந்நிலையினை மாற்றமுடியும் என்ற நோக்கிலேயே இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என நாம் கருதின் அது தவறே.
தமிழ் மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரினை நடாத்தியது இலங்கை என்பதைவிட இந்தியா என்று சொல்லுமளவிற்கு அப்போரில் தனது செல்வாக்கினை செலுத்தியிருந்தது இந்தியா. அதன் காரணமாக அப்போரினால் இலங்கைக்கு ஏற்படும் அனைத்து எதிர்மறை விளைவுகளுக்கும் எதிராக தனது முழுப்பலத்தினை பயன்படுத்தி வந்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வருவதனை தடுத்தது மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சார நடவடிக்கையிலும் இந்தியா தன்னை ஈடுபடுத்தியே வந்துள்ளது.
தற்போது போரின் எதிர்மறை விளைவாகவும் இலங்கையின் முக்கிய தேவையாகவும் உள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ.பீ வரிச்சலுகை. இலங்கை தனது உச்சவலுவை பயன்படுத்தியும் முடியாது என்ற நிலையில் மீண்டும் அதற்கு முண்டு கொடுக்க முன்வந்துள்ளது இந்தியா.
மாநில அரசு எதிர்க்காத வகையுடன் கூடிய மத்திய அரசின் இலங்கை அரசு சார்பான அறிக்கை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ.பீ வரிச்சலுகையினை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ளது.
இதன்பிரகாரம் உணவு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கின்றது. மீள்குடியேற்றம் தொடர்பாகவே மக்கள் அக்கறை கொண்டுள்ளனர். அது தொடர்பாகவும் இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மக்களை மீள்குடியேற்றம் செய்யவுள்ளதாக எமக்கு இலங்கை அரசு உறுதியளித்துள்ளது என்ற ஒரு அறிக்கையினை வெளியிடுதலானது இலங்கையின் தேவையும் இந்தியாவின் நோக்கமும் தமிழகத்தின் திருப்தியுமாகவும் இருக்கும்.
முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுள்ள மக்களை ஏமாற்றுவதற்காக இந்தியாவிலிருந்தும் ஒரு குழு இலங்கை சென்றுள்ளது என்பது மட்டுமே உண்மை.
இந்திய தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் என்ன?: செய்தி ஆய்வு
Lagt inn av
chandran
11.10.09



0 kommentarer