தமிழர்கள் பற்றி ஏளனமாக விமர்சனம் இலங்கை தூதர் மன்னிப்பு கேட்கவேண்டும்; வைகோ கோரிக்கை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையின் துணைத்தூதர் வடிவேல்கிருஷ்ண மூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது ஆணவத்தோடும், அகம் பாவத்தோடும், திமிரோடும் இந்திய நாட்டையும், தமிழக மக்களையும் கிள்ளுக் கீரையாக எண்ணி வாய்க் கொழுப்பை வழிய விட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள வல்லரசு நாடுகளின் தூதர் கள்கூட இதுவரை இப்படி ஏளன மாகவும், எகத்தாள மாகவும் கருத்து கூறிய தில்லை.
அமெரிக்காவிலே உள்ள இந்தியத்தூதர் ரோனன் சென் இந்திய தலைவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் துச்சமாகப் பேசியதைக்கண்டித்து கொந்தளிப்பு ஏற்பட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவை தாக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து, சித்ரவதை செய்து இலங்கை சிறைகளில் அடைத்து வைத்ததையும் உலகமே அறிந்த உண்மையாகும்.கடந்த 20 நாட்களுக்குள் 7 தடவைகள் இலங்கை கடற்படை தமிழக மீனவர் களை நமது கடல் எல்லையில் தாக்கி இருக்கிறது.
உண்மை இவ்வாறிருக்க, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக கூறுவது பொய்ச்செய்தி என்றும், அப்படி நடக்கவே இல்லை என்றும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அக்கிரமமாக கூறியுள்ள தோடு, கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையே இல்லை என்றும், நமது மீனவர்களை இலங்கை கடற்படை பாதுக்கிறது என்றும் கிண்டலாகக்கூறி உள்ளார்.
இந்தியக் கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது என்றும் கூறி உள்ளார்.
ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, மனிதனையே கடிக்க முற்படுவது என்று கூறுவதற்கிணங்கத்தான் இலங்கையின் துணைத்தூதர் இப்படி வாய் நீளம் காட்டி உள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் போது சிங்கள அரசின் உச்சந்தலையில் அடித்தாற் போல் இந்திய அரசு செயல் பட்டிருந்தால் துணைத் தூதருக்கு இப்படி பேசுகிற தைரியம் வந்திருக்காது. இலங்கையின் சிங்கள இனவாத அரசின் முள்வேலி முகாம்களில் மூன்று லட்சம் தமிழ்மக்கள் துன்பத்தில் வதைபடும் கொடுமையை ஐ.நா. மன்றத்து அதிகாரி களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
சர்வதேச பத்திரிகை யாளர்களும், தொண்டு நிறுவ னங்களும் அந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்க முகாம்களை பார்வையிட தமிழ்நாட்டு பத்திரிகை யாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், பார்வை யிடுவதற்கு அம்முகாம்கள் ஒன்றும் மிருகக் காட்சி சாலைகள் அல்ல என்று துணைத் தூதர் சிங்கள இனவாத நஞ்சைக் கக்கி உள்ளார்.
மிருகங்களைவிட மோசமான முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நடத்தப்படுகின்றனர். நம்சொந்த சகோதர சகோதரிகள், பச்சிளம் குழந்தைகள் பல்லாயிரக் கணக்கிலே சிங்களவர்களால் கொல்லப்படுவதை எண்ணி நம் நெஞ்சமெல்லாம் வேதனை நெருப்பு பத்தி எரிகையில் அதிலே பெட்ரோலை ஊற்றுகிறான் இலங்கையின் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி.
தமிழ் இனத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் ஏளன வார்த்தைகள் வீசிய துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை பகிரங்க மன்னிப்புக் கேட்கச் செய்வதோடு உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



0 kommentarer