இலங்கைத் தேர்தலில் ராஜபக்சவுக்கு உதவிடும் நோக்கத்தில் தான் இந்தியாவில் இருந்து நாடாளுமன்றக் குழு அனுப்பப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்சும், தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்குத் தான் நன்மை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
"கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பணிகள்தான் தமிழர்களை மீண்டும் அவர்களின் இடத்திற்கு குடியேற்றுவதற்கு தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிப்பகுதி நெடுகிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது?
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை? இந்தியாவிடம் ஏன் கேட்கவில்லை?
இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை.
இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது," என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
நாடாளுமன்றக் குழுவால் ராஜபக்சேவுக்கே நன்மை : விஜயகாந்த் கருத்து தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தான் நன்மை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
"தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்சவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.
இந்தப் பயணம் ராஜபக்சவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களே தனக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ச இதை பயன்படுத்திக் கொள்வார்.
"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்' என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும்' என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.
எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, இதைச் சீரழித்தவர் கருணாநிதிதான். இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.
நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு? பேராபத்தில் தமிழர்கள் உள்ளபோது, இந்திய அரசு மௌனம் சாதிப்பது யாருக்காக இந்த அரசு நடைபெறுகிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை, இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இலங்கைத் தேர்தலில் ராஜபக்சவுக்கு உதவவே எம்.பி.க்கள் குழு பயணம்: ராமதாஸ்; நாடாளுமன்றக் குழுவால் ராஜபக்சேவுக்கே நன்மை: விஜயகாந்த்
Lagt inn av
chandran
15.10.09



0 kommentarer