வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்து, இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு, மீள் குடியேற்ற கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம்,கோப்பாய், நல்லூர் பிரதேச செயலகங்களைச் சோந்தவர்கள் இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளை, வவுனியாவில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருநூற்று நாற்பத்து நாலு பேர் ஜ.ஒ.இ.எம் நிறுவனத்தின் உதவியுடன் தனியார் பஸ்களில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் வசதிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகம் வழங்கியது. இவர்களுக்கான பதிவுகள் மேற்கொண்ட பின்னர் இன்று காலையில் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



0 kommentarer