முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அவரது இரண்டு பிரதிநிதிகள் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்தச் சந்திப்புக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய தினமே, எதிர்க்கட்சிக் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து இது குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிட்டால் அரசாங்கத்திலுள்ள கட்சியொன்றும் அதற்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்கள் யார் என்பது குறித்த தகவலை வெளியிடக் கூடாது எனவும் இதுதொடர்பாக ஜே.வி.பி.யுடனும் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து இணக்கம்?
Lagt inn av
chandran
21.09.09



0 kommentarer